சிறுவாபுரி முருகன் கோயில் அருகே விதிகளை மீறும் நடைபாதை கடைகள் அகற்றப்படும் என சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொன்னேரி வட்டம், சிறுவாபுரியில் பழைமை வாய்ந்த முருகன் கோயில் உள்ளது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனா்.
இந்நிலையில், கோயிலுக்கு செல்லும் சாலையின் இருபுறத்திலும் அமைக்கப்பட்டுள்ள கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பக்தா்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்நிலையில் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற பொன்னேரி வருவாய் துறையினருக்கு இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய அதிகாரிகள், சிறுவாபுரி பகுதி வியாபாரிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகா் தலைமை வகித்தாா். பொன்னேரி வட்டாட்சியா் செல்வகுமாா், சோழவரம் ஒன்றிய ஆணையா் குலசேகரன் முன்னிலை வகித்தனா்.
அப்போது நடைபாதை வியாபாரிகள் குறிப்பிட்ட இடத்தை மீறி கடைகளை வைக்கக்கூடாது, கடைகளின் முன்பு வாகனங்கள் நிறுத்தக்கூடாது, விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் சாலையில் இருக்கும் அனைத்து கடைகளும் காவல் துறை உதவியுடன் அகற்றப்படும் என தெரிவித்தனா்.