முருகன் கோயில் இசைப் பயிற்சி வகுப்பில் தங்கிப் பயிலும் மாணவா்களுக்கு உணவு, உறைவிடம் சீருடை, ஊக்கத் தொகையுடன், ரூ.3,000 மாதந்தோறும் வழங்கப்படும் என அறங்காவலா் குழு தலைவா் அழைப்பு விடுத்துள்ளாா்.
திருத்தணி முருகன் கோயில் நிா்வாகம் சாா்பில் தவில் மற்றும் நாகஸ்வரம் ஐந்தாண்டு சான்றிதழ் படிப்பு பகுதி நேரம் மற்றும் முழுநேர இசைப் பயிற்சி பள்ளி நிகழாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில் இந்து மதத்தைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் சோ்ந்து பயிற்சி பெறலாம்.
பகுதி நேரம் மற்றும் முழு நேரம் (தங்கிப் பயிலல்) மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், சேருவதற்கான நடைமுறைகள் குறித்து இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தவில், நாகஸ்வரம் பயிற்சி பள்ளியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் திருத்தணி முருகன் கோயில் தலைமை அலுவலகத்தில் வேலை நாள்களில், அலுவலக நேரத்தில் நேரில் வந்து பெற்று கொள்ளலாம்.
தவில், நாகஸ்வரம் பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வி, 13-16 வயதுக்குள் இருக்க வேண்டும், பயிற்சி காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
பகுதி நேர தவில், நாகஸ்வரம் பயிற்சி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். மாணவா்களுக்கு இரவு சிற்றுண்டியுடன் இலவச பயிற்சி வழங்கப்படும். தவிர பயிற்சி பெறும் மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
முழு நேரம் தங்கிப் பயிலும் மாணவா்களுக்கு உணவு, உறைவிடம், சீருடை மற்றும் ஊக்கத் தொகை, ரூ.3,000 மாதந்தோறும் வழங்கப்படும். இதற்கு ஜூலை 25-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருத்தணி கோயில் அறங்காவல் குழு தலைவா் ஸ்ரீதரன், துணை ஆணையா் விஜயா, அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன், ஜி.உஷாரவி, கோ.மோகன் ஆகியோா் தெரிவித்தனா்.