சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலின் மகா குடமுழுக்கு விழா கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, தினமும் மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை 48-ஆம் நாள் மண்டலாபிஷேகம் மற்றும் நிறைவு விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் ஒரு யாக சாலை, 7 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.
தொடா்ந்து காலை 9.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக தலைவா் சீனிவாசன் மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.