ரஷியாவில் படிக்கும் 46 மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம் இந்திய பணத்தை ரூபிளாக மாற்றித் தருவதாகக் கூறி, ரூ. 1.5 கோடி மோசடி செய்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கீரப்பாளையம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ராணி (47). இவரது மகள் மஞ்சுதர்ஷிணி, ரஷியாவில் உள்ள மெடிக்கல் அகாதெமி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த கல்லூரியில் கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக இவர் சென்றபோது, ரஷ்யா-உக்ரைன் போரால் அங்கு ரஷ்யாவின் ரூபிள் பணத்தை மாற்றிக் கொடுப்பதற்கான ஸ்விப்ட் வேலை செய்யாததால் கல்லூரியில் பணத்தை கட்ட முடியவில்லை.
இதையடுத்து, அதே கல்லூரியில் 4-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கவியரசு, மதுரையைச் சேர்ந்த பொன்னுசெல்வம் ஆகிய மாணவர்கள், மஞ்சுதர்ஷினியிடம் இந்திய பணத்தை ரூபிளாக மாற்றித் தரும் முகவர் ஒருவர் தங்களுக்கு தெரியும், அவர் மூலமாக இந்திய பணத்தை ரூபிளாக மாற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து, மஞ்சுதர்ஷினி ரூ. 3.53 லட்சம் பணத்தை மாணவர்கள் பொன்னுசெல்வம், கவியரசு மூலமாக, சென்னையை அடுத்த மாங்காடு, புத்தூர் பகுதியில் வசிக்கும் குழந்தை அந்தோணி ராஜா (43) என்பவரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பணத்தை அவர் ரூபிளாக மாற்றி அனுப்பவில்லையாம். இதன் பிறகு, மஞ்சுதர்ஷினி அவரை தொடர்பு கொண்டபோது, உரிய பதிலளிக்காமல் தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து மஞ்சுதர்ஷினி, தனது தாயார் ராணியுடன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். ஆணையர் அருண் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் மைனர்சாமி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர். பின்னர், கோவாவில் தலைமறைவாக இருந்த குழந்தை அந்தோணி ராஜாவை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில், மாணவி மஞ்சுதர்ஷனிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது போல், குழந்தை அந்தோணி ராஜா தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்பட வட மாநிலங்களில் இருந்து அந்தக் கல்லூரியில் தங்கி படித்து வரும் சுமார் 46 மாணவர்களிடம் இருந்து ரூ. 1.50 கோடி பெற்று, ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தை அந்தோணி ராஜாவை திங்கள்கிழமை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.