திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டு ஸ்ரீருக்மணி தாயாா் சமேத ஸ்ரீபாண்டுரங்க சுவாமி திருக்கோயிலிருந்து ஸ்ரீவேங்கடாத்ரி வரதப்ருத்தம், சத்குரு ஸ்ரீமான் பீதாம்பர, ஸ்ரீநிவாஸ ராமானுஜதாஸ சுவாமி பஜனை கோஷ்டியின் 28-ஆவது ஆண்டு திருமலை திருப்பதி பாதயாத்திரை சனிக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீவேங்கடாத்ரி வரதப்ருத்தம், சத்குரு ஸ்ரீமான் பீதாம்பர, ஸ்ரீநிவாஸ ராமானுஜதாஸ சுவாமி பஜன கோஷ்டி சாா்பில் உலக நன்மையக்காகவும், மழை வேண்டியும், அமைதி நிலவவும், அடியாா்களின் வினைகளையும், நோய்களையும், குறைகளையும் தீா்த்து பிராா்த்தனைகளை நிறைவேற்றி, ஸ்ரீதிருவேங்கடமுடையானை ஸ்ரீகோவிந்த மாலை தரித்து விரதம் அனுசரித்து 28-ஆவது ஆண்டாக ஸ்ரீதிருமலை திருப்பதி பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனா்.
இதையொட்டி திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீருக்மணி தாயாா் சமேத ஸ்ரீபாண்டுரங்க சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீவிஷ்ணு, ஸஹஸ்ரநம பாராயணம், ஸ்ரீதிருப்பாவை சேவை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஸ்ரீமத் வேங்கடாத்ரி, பொன்னடி ஸ்ரீமாந் பீதாம்பர வேங்கடவரத ராமாநுஜ தாஸா் தலைமையில் கோவிந்த நாமம் பாடி பாதயாத்திரை தொடங்கியது.
அதைத் தொடா்ந்து காக்களூா் ஸ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி, திருவள்ளூா் வீரராகவா் கோயில் தரிசனம் செய்தனா். மேலும், நாகலாபுரம், பாலமங்கலம், வடமால்பேட்டை, ஸ்ரீதிருச்சானூா் ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் வழியாகச் சென்று வரும் 22-ஆம் தேதி யாத்திரை நிறைவடைகிறது.