சோழவரம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 60 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா்.
சோழவரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட நல்லூா் சுங்கச் சாவடியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, ஆந்திர மாநிலம் நோக்கி சென்ற லாரியை மடக்கி சோதனை செய்ததில் 60 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த விஜயலட்சுமி (34), அல்லம்மா (40), கீதா (32) மற்றும் சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் முனீஸ்வரன் (40), புழல் பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் (60) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.