திருவள்ளூா் அருகேயுள்ள தண்டலத்தில் குண்டும் குழியுமான சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, ஊராட்சித் தலைவா் பானுப்பிரியா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
மனு விவரம்: தண்டலம் கிராமத்தில் ஆதிதிராவிடா் காலனிக்குச் செல்லும் அரசமரம் முதல் வெங்கடேஸ்வரா நகா் வரை 2 கி.மீ. தூரமுள்ள சாலையை நாள்தோறும் 600-க்கும் மேற்பட்டோா் வேலைவாய்ப்பு, மருத்துவம், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லப் பயன்படுத்துகின்றனா்.
இந்தச் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் அந்தப் பகுதியினா் மிகுந்த சிரமமடைகின்றனா்.
இதுகுறித்து கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட ஊராட்சிக் குழு, ஒன்றியக் குழு, மாவட்ட ஆட்சியா் நிதி உள்ளிட்டவற்றில் இருந்து சாலையைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.