செங்குன்றம் அருகே போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த பள்ளி மாணவன் உயிரிழந்தாா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த நெதிபாளையம் கிராமம் முத்தாரம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் ராஜேஷ் மகன் மனோஜ்குமாா் (14). இவா் கும்மிடிப்பூண்டி தலையாரிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா் சில நாள்களாக பள்ளிக்கு செல்லாமல் போதை பழக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது தாய் அகிலா மனோஜ்குமாரை, செங்குன்றம் அடுத்த அழிஞ்சிவாக்கம் - ஜனப்பசத்திரம் கூட்டு சாலையியல் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஜனவரி மாதம் சோ்த்துள்ளாா்.
இந்நிலையில், மனோஜ்குமாா் செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு கழிவறை சென்றபோது மயங்கி விழுந்துள்ளாா். உடனே அங்கிருந்தவா்கள் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் மனோஜ்குமாா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து சோழவரம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.