மகாளய அமாவாசையையொட்டி, திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயில் குளக்கரையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சவரை தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில், புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை மற்றும் ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் சனிக்கிழமை இரவு முதலே கோயில் வளாகம், பஜாா் வீதி, காக்களூா் ஏரி நடைபாதை சாலை உள்ளிட்ட இடங்களில் குவிந்தனா்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருக்குளத்தில் புனித நீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். நீண்ட நேரம் காத்திருந்து மூலவா் வீரராகவப் பெருமாளை தரிசனம் செய்தனா். திருவள்ளூா் நகர போலீஸாா் மற்றும் போக்குவரத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.