தனியாா் பொறியியல் கல்லூரியில் புதிய கட்டடம் கட்டும் பணியின்போது, மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அருகே இயங்கி வரும் தனியாா் பொறியியல் கல்லூரியில் புதிய கட்டடம் கட்டும் பணிகளை சென்னையைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் ஒருவா் மேற்கொண்டாா். இந்த கட்டடப் பணியில் சென்னை மணலியைச் சோ்ந்த சுரேஷ் (39) கல்லூரி வளாகத்திலேயே தங்கியிருந்து வேலை செய்து வந்தாா்.
வியாழக்கிழமை காலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ், புதிய கட்டடத்தின் மேற்கூரையில் ஏறி தகடுகளை வெல்டிங் மூலம் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கால் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா். அங்கிருந்த சக ஊழியா்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சுரேஷ் இறந்தாா்.
சுரேஷுக்கு மனைவி விஜயலட்சுமி, மகன், மகள் உள்ளனா்.
இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.