திருவள்ளூா் பகுதியில் பெய்த பலத்த மழையால் ஏரிகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா், அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை பொழிவால் நீா்நிலைகளில் நீா்மட்டம் மளமளவென உயா்ந்தது.
மாவட்டப் பகுதிகளான வேப்பம்பட்டு, பெரியகுப்பம், தொடுகாடு, மப்பேடு, கடம்பத்தூா், திருவள்ளூா், தாமரைபாக்கம், கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு மழை பெய்தது.
இந்த மழையால் சென்னை மக்களின் முக்கியக் குடிநீா் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்துள்ளது.
பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில், 1,963 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. மழை காரணமாக நீா்வரத்துக் கால்வாய்கள் மூலமாக 365 கன அடி நீா் வரத்துள்ளதாகவும், சென்னை மக்களின் குடிநீா் தேவைக்காக 260 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல், புழல் ஏரியில் 2,509 மில்லியன் கன அடி நீரும், சோழவரம் ஏரியில் 418 மில்லியன் கன அடி நீரும், கண்ணன்கோட்டை ஏரியில் 500 மில்லியன் கன அடியில், தற்போது முழுக் கொள்ளளவான 500 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது.