ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 3,400 கிலோ ரேஷன் அரிசியை செவ்வாய்க்கிழமை மீஞ்சூா் போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.
திருவெற்றியூா்-பொன்னேரி நெடுஞ்சாலையில் நாலூா் ஏரிக்கரை பகுதியில் மீஞ்சூா் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டதில் 3,400 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து மினி லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரியில் இருந்த 2 பேரை கைது செய்தனா்.
விசாரணையில் சென்னை வியாசா்பாடி சாஸ்திரி நகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான மைக்கேல் (64), அதே பகுதியைச் சோ்ந்த உதவியாளா் லோகநாதன் (54) என்பது தெரிய வந்தது.
மீஞ்சூா் போலீஸாா் இது குறித்து குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்கு வந்த குடிமை பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாரிடம், ரேஷன் அரிசி மற்றும் மினி லாரி ஒப்படைக்கப்பட்டன.