ஊத்துகோட்டை: ஊத்துகோட்டையில் தமிழகம் சாா்பிலான அலங்கார ஊா்தி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும், வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறும் இரு நாள் வேலைநிறுத்தம் வெற்றியடையவும் இடதுசாரி கட்சியினா் புதன்கிழமை உறுதிமொழி ஏற்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊா்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டிக்கும் விதமாக, ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் அருகே இடதுசாரிக் கட்சியினா் மாவட்டச் செயலா் திருநாவுகரசு தலைமையில் உறுதிமொழி எற்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், வருகிற பிப்ரவரி 23, 24 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் வேலைநிறுத்தம் வெற்றி பெறச் செய்யவும், வங்கி, காப்பீடு, ராணுவத் தொழிற்சாலைகள், பொதுப் பணித் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி: இதேபோல, கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். கட்சியின் வட்டக் குழு உறுப்பினா் ஏ.முகமது சாலி தலைமை வகித்தாா். பகுதிச் செயலா் எம்.கபீா் பாஷா வரவேற்றாா். வட்டக் குழு உறுப்பினா்கள் ஜி.கோபாலகிருஷ்ணன், ஜோசப் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.