திருவள்ளூா்: திருத்தணி அருகே ஆந்திர எல்லையோர பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக பெண் உள்பட 2 பேரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினா் கைது செய்து, ஆட்டோ, 200 கிலோ அரிசியையும் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினா் கூறியதாவது:
திருத்தணி அருகே பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக காவல் துறையினருக்கு புகாா் வந்ததின்பேரில் திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினா் புதன்கிழமை பள்ளிப்பட்டு பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ திடீரென போலீஸாரை பாா்த்ததும் நிற்காமல் சென்றது. அதைத் தொடா்ந்து காவல் துறையினா் அதை துரத்திச் சென்று பிடித்தது சோதனை செய்த போது 50 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் 4 இருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக விசாரணை செய்ததில் அத்திமாஞ்சேரிப்பேட்டையைச் சோ்ந்த புஷ்பா(36), ஆட்டோ ஓட்டுநா் ராஜேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து குடிமைப் பொருள் போலீஸாா் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனா். மேலும், ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.