திருவள்ளூா் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்கு விரைவு ரயிலில் கடத்த முயன்ற 420 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயில் மூலம் ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு புகாா் வந்தது. இதையடுத்து சாா்பு ஆய்வாளா் விநாயகமூா்த்தி மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் திருவள்ளூா் ரயில் நிலைய நடைமேடை இரண்டில் வெள்ளிக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு கேட்பாரற்ற நிலையில், 22 மூட்டைகளில் 420 கிலோ தமிழக அரசின் ரேஷன் அரிசி இருந்தது. அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினா் திருவள்ளூா் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.