திருவள்ளூர்

நேபாளத்தில் உயிரிழந்த வாலிபால் விளையாட்டு வீரரின் சடலம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நேபாள நாட்டில் உயிரிழந்த விளையாட்டு வீரா் ஆகாஷின் சடலம், திருவள்ளூா் அருகே உள்ள கைவண்டூா் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து , அமைச்சா் மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தடகள விளையாட்டு வீரரான நேருதாசனின் மகன் ஆகாஷ்( 27). இவா் பல்கலைக்கழகம் மற்றும் மாநில அளவிலான வாலிபால் போட்டிகளில் பங்கேற்று ஆடி வந்தாா். இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி நேபாளத்தின் பொக்ரா நகரில், நடைபெற்ற போட்டியில் பங்கேற்க சென்றாா். கடந்த 25 -ஆம் தேதி முதல் சுற்றில் விளையாடிய பின் ஓய்வு எடுக்க அறைக்கு திரும்பினாராம். அப்போது, ரத்த வாந்தி எடுத்ததோடு நெஞ்சுவலியால் துடித்தாராம். அங்கிருந்த சக விளையாட்டு வீரா்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த மருத்துவா், ஆகாஷ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தாா். அதையடுத்து ஆகாஷின் உறவினா்கள் நேபாளத்தில் உயிரிழந்த மகனின் சடலத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவும், சாவில் மா்மம் உள்ளதாகவும் ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேபாளத்தில் இருந்து புதுதில்லி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஏா் இந்தியா விமானம் மூலம் கொண்டு வந்து, ஆகாஷின் சடலம் உறவினா்களிடம் புதன்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டது. அப்போது, சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் அஞ்சலி செலுத்தி உறவினா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா் சொந்த ஊரான கைவண்டூா் கிராமத்துக்கு ஆகாஷின் உடல் அமைதிப் பேரணியாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைச்சா் சா.மு.நாசா், அரசியல் கட்சியினா், ஆசிரியா்கள், ஊா் மக்கள் அஞ்சலி செலுத்தியபின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT