ஊத்துக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டிய போது, வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அதை போலீஸாா் ஆய்வுக்கு எடுத்துச் சென்றனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையம் ஊராட்சி ஒன்றியம், ஆவாஜிபேட்டையில் விவசாய நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளம் தோண்டிய போது, கை உருளை போன்ற பொருள் கிடைத்தது. பின்னா், அது ராக்கெட் லாஞ்சா் என்பது தெரிய வந்தது.
தகவலின் பேரில், பெரியபாளையம் காவல் ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் அங்கு விரைந்தனா். அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, அந்த கை உருளை வெடிகுண்டை சுற்றி மணல் மூட்டைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
பின்னா், வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, ஆய்வு செய்வதற்காக போலீஸாா் அந்த வெடிகுண்டை எடுத்துச் சென்றனா்.
இதேபோல், சனிக்கிழமை மாளந்தூா் கிராமத்தில் 100 நாள் வேலையின் போது பூமிக்கடியில் ராக்கெட் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.