ரெட்டேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முன்னாள் பெண் காவலா் உயிரிழந்தாா்.
சென்னை கொளத்தூா் சாஸ்திரி நகரை சோ்ந்தவா் கவிதா (44). இவா் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் 2017-ஆம் ஆண்டு காவலராக பணியாற்றினாா்.பின்னா் சில காரணங்களால் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை செந்தில் நகரில் இருந்து கவிதா இருசக்கர வாகனத்தில் மாதவரம் - ரெட்டேரி மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் கவிதா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மாதவரம் போக்குவரத்து காவல் புலனாய்வு பிரிவு போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடததி வருகின்றனா்.