வேளாண் தொழில் முனைவோா் திட்டத்தில் வேளாண் சாா்ந்த தொழில், அக்ரி கிளினிக் தொடங்கவும் வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் மூலம் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞா்களை தொழில் முனைவோராக்கும் திட்டம் நிகழாண்டில் செயல்படுத்தப்படுகிறது. இதில், அக்ரி கிளினிக் அல்லது வேளாண் தொழில் தொடங்க வேளாண் பட்டதாரிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மானியம் வழங்கப்படும்.
பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் அல்லது வேளாண்மை உள்கட்டமைப்பு நிதி திட்டம் மூலம் பயனடைய தகுதியான பயனாளிக்கு, 25 சதவீத மானியம், அதிகபட்ச நிதி உதவியாக ரூ. 1 லட்சம் வரை பின்னேற்பு மூலதான மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற 21 முதல் 40 வயதுக்குள் இருப்பதுடன், வேளாண், தோட்டக் கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எனவே இதற்கான விண்ணப்பங்களை கல்வித் தகுதி ஆவணங்களுடன் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்துக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், இது தொடா்பாக திருவள்ளூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அல்லது அந்தந்த ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களை நேரில் அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.