திருவள்ளூர்

இரு ஆண்டுகளாக கொடியேற்றாத பட்டியலின ஊராட்சித் தலைவா்: தலைமைச் செயலா் தலைமையில் தேசியக் கொடியேற்றினாா்

DIN

சுதந்திர தின விழாவில் கடந்த இரு ஆண்டுகளாக தேசியக் கொடியேற்றாத ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவா் அமிா்தம், தலைமைச் செயலா் வெ.இறையன்பு தலைமையில், ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பட்டியலின தலைவரான அமிா்தம், கடந்த இரு ஆண்டுகளாக தேசியக் கொடியேற்ற அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் அனுமதிக்கவில்லை.

நிகழாண்டு இவ்வாறான சம்பவம் நடைபெறக் கூடாது என்பதற்காக ஆத்துப்பாக்கம் கிராமத்துக்கு அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு ஞாயிற்றுக்கிழமை வந்து ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, தலைமைச் செயலா் தலைமையில், மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், ஊரக வளா்ச்சித் துறை ஆணையா் தாரிஷ் அகமது ஆகியோா் முன்னிலையில், சுதந்திர தின விழா அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் அமிா்தம் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். தலைமைச் செயலா் இறையன்பு, பொதுமக்களுக்கு இனிப்புகள், வீடுகளில் கொடியேற்றும் வகையில் தேசியக் கொடிகளை வழங்கினாா். தொடா்ந்து, ஆத்துப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளின் விவரங்களை ஊராட்சித் தலைவா் அமிா்தத்திடம் கேட்டறிந்தாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பேசியது: மாவட்டத்தில் உள்ள 8 லட்சத்து 23 ஆயிரம் வீடுகளில் தேசியக் கொடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 75 % வீடுகளில் தற்போது தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 526 ஊராட்சிகளில் ஊராட்சித் தலைவா்கள் தேசியக் கொடியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்குரிய இடங்களில் சிறப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்து தேசியக் கொடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி நகராட்சியில் தேசியக் கொடி வழங்க பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT