கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, திருவள்ளூரில் வீடுகள், கடைகள், கோயில்களில் வைத்து வழிபாடு செய்வதற்காக பல்வேறு வகைகளில் கிருஷ்ணர் பொம்மைகள் தயார் செய்யும் பணியில் சாலையோரம் குடில் அமைத்து, வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா, வரும் ஆக.19-இல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வீடுகள், திருக்கோயில்களில் கிருஷ்ணர் பொம்மைகள் வைத்தும், உறி அடித்தும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த விழாவுக்காக திருவள்ளூர் பகுதியில் திருத்தணி சாலை, ஊத்துக்கோட்டை சாலை, காக்களூர் மற்றும் ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குடில் அமைத்து தங்கியிருந்து வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு கிருஷ்ணர் பொம்ôமைகளை வீடுகள், கடைகள், திருக்கோயில்களில் வைத்து வழிபாடு செய்யும் வகையில் தயார் செய்து வருகின்றனர்.
இந்த விழாவுக்காக கோகுலகிருஷ்ணர், வெண்ணெய் கிருஷ்ணர், ராதாகிருஷ்ணர், புல்லாங்குழல் கிருஷ்ணர், மாட்டுடன் கிருஷ்ணர், ஆலிழை கிருஷ்ணர் என 16 வகையான கிருஷ்ணர் பொம்மைகளை தயார் செய்யும் பணியில், இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பொம்மைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், வெள்ளை சிமெண்ட் மற்றும் தேங்காய் நார் கொண்டு தயார் செய்து வருகின்றனர். அதனால் நீர் நிலைகளில் எளிதாகவும், பொம்மைகளை எளிதாகக் கரைக்கவும் முடியும்.
இது தொடர்பாக காக்களூரில் தங்கி பொம்மை தயார் செய்யும் கைவினைக் கலைஞரான ராஜஸ்தானைச் சேர்ந்த செல்லாராம் கூறியதாவது:
நான்கு தலைமுறைகளாக நவராத்திரி கொலு பொம்மை, விநாயகர், கிருஷ்ணர், ஐயப்பன் என பல்வேறு பொம்மைகள் தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றால் கிருஷ்ண ஜெயந்தி விழாவை வீடுகளிலேயே கொண்டாடினர்.
அதனால், இந்த விழாவுக்காக தயார் செய்த பொம்மைகள் விற்பனையாகாமல் இருந்தன. நிகழாண்டில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, ஏற்கெனவே தயார் செய்த கிருஷ்ணர் பொம்மைகளுக்கு பல்வேறு வகையில் வர்ணங்கள் பூசி தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், புதிதாக ஆலம் இலை கிருஷ்ணன், பேபி கிருஷ்ணர், பேபி ஆண்டாள், யசோதை கிருஷ்ணர் போன்ற பல்வேறு வகையான பொம்மைகளை வடிவமைத்து தயார் செய்துள்ளோம்.
இந்த விழா முடிந்ததும் அடுத்து விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபடுவோம் என்றார் அவர்.