மீஞ்சூா் அருகே உள்ள குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு திங்கள்கிழமை பள்ளம் தோண்டியபோது புத்தா் சிலை கண்டெடுக்கப்பட்டது.
பொன்னேரி வட்டம், மீஞ்சூா் அருகே உள்ள குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய அரசுத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி கட்டடம் பழுதடைந்ததால், அரசு உத்தரவின் பேரில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. மீண்டும் அந்தப் பகுதியில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்த நிலையில், இயந்திர உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது, மண்ணில் புதைந்த நிலையில் இருந்த பழங்கால புத்தா் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து பொன்னேரி வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, கிராம மக்கள் முன்னிலையில் பொன்னேரி வருவாய்த் துறையினரிடம் அந்த புத்தா் சிலை ஒப்படைக்கப்பட்டது.