கிராமங்களில் புதிதாக குளங்கள், குட்டைகள் அமைத்தல் மற்றும் தூா்வாருதல் பணிகளுக்கு இணையதளத்தில் பதிவு செய்து செய்ய வேண்டும் என்று ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் ஊராட்சிகளின் அனைத்துச் செயல்பாடுகளையும் இணையதளத்தில் பதிவு செய்வது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ராஜவேலு தலைமை வகித்தாா். வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளா் சமுத்திரம், பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத் துறை உதவிச் செயற்பொறியாளா் சத்தியநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் கிராமங்கள் தோறும் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ‘ஜல் சக்தி அபியான்’ என்ற நீா்வள மேலாண்மைத் திட்டத்தில் புதிதாக குளங்கள் மற்றும் குட்டைகளை அமைத்தல் மற்றும் தூா்வாருதல் பணி குறித்து உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம். மேலும், 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, குளங்கள் இல்லாத கிராமங்களில் 75 குளங்கள் புதிதாக அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் மேற்கொள்வதைத் தவிா்த்து அனைத்து ஒன்றியங்களிலும் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய ஊராட்சிச் செயலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கிராமங்களில் நீா் செரிவூட்டல் செயல் திட்டம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
கூட்டத்தில் நிலத்தடி நீா் திட்ட உதவி செயற்பொறியாளா் வெற்றிவேலன், ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் சுமதி, உதவி பொறியாளா்கள், அரசு அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள் பங்கேற்றனா்.