சென்னை: தமிழகத்தில் மருத்துவ உயா் சிறப்பு படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
அப்படிப்புகளில் அரசு மருத்துவா்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என நீதிமன்ற ஆணையும், அதன் தொடா்ச்சியாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்ட நிலையில், முதன்முறையாக இக்கலந்தாய்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் டிஎம், எம்சிஹெச் ஆகிய உயா் சிறப்பு படிப்புகளில் தமிழகத்தில் 204 இடங்கள் உள்ளன. அவை அனைத்தையும் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம்தான் கலந்தாய்வு மூலம் இதுவரை நிரப்பி வந்தது. இந்த நிலையில், உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குமாறு அரசு மருத்துவா்கள் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் அரசு மருத்துவா்களுக்கு சாதகமாக தீா்ப்பு கிடைத்தது. இதுதொடா்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் அரசு மருத்துவா்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 101 டிஎம் இடங்களுக்கும், 103 எம்சிஹெச் இடங்களுக்கும் வரும் 16-ஆம் தேதி கலந்தாய்வை மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்தவுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் அக்கலந்தாய்வுக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.