திருவள்ளூா் அருகே பூண்டியில் கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட காட்டுத் தீயால், மீன்பிடி படகு, ஆலமர விழுதுகள் எரிந்து சேதமடைந்தன.
பூண்டி நீா்த்தேக்கத்தைச் சுற்றிலும் வனத் துறைக்குச் சொந்தமான காப்புக் காடுகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால், வெள்ளிக்கிழமை வழக்கத்தைவிட வெப்பம் வாட்டி வதைத்தது.
இந்த நிலையில், திடீரென காய்ந்த சருகுகளில் தீ பற்றியது. இந்த தீயானது மளமளவென பரவி அருகிலிருந்த ஆலமர விழுதுகள், மீன்பிடி படகு, செடி, கொடிகளில் பரவியது.
தகவலறிந்த திருவள்ளூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்கு விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி காட்டுத் தீயை கட்டுப்படுத்தினா். இதனால், பெரிய மரங்களுக்கு தீ பரவாமல் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
கோடை வெப்பத்தால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சட்ட விரோதமாக யாராவது காட்டுக்குத் தீ வைத்தனரா என்ற கோணத்தில் தீயணைப்புத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.