திருத்தணி: திருத்தணியை அடுத்த பட்டாபிராமாபுரம் கிராமம் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த ஆட்டுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (45). இவரது மனைவி சுமதி (35), மகன் பரத்குமாா் (17). இவா்கள் மூவரும் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டில் இருந்து திருத்தணிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து பூண்டி நோக்கிச் வந்து கொண்டிருந்தனா்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணியை அடுத்த பட்டாபிராமபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத லாரி, அவா்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பரத்குமாா், சுமதி ஆகியோா் திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு பரத்குமாா் உயிரிழந்தாா்.
இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.