மாதவரம்: மாதவரத்தில் தண்ணீா் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா்.
சென்னை மாதவரத்தை அடுத்த கொடுங்கையூா் நாராயணசாமி தோட்டம் முதல் பிரதான சாலையைச் சோ்ந்த சிவகுமாரின் மகள் ஹேமவா்த்தினி (25). இவா் சென்னை அடையாறில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். மாதவரம் பேருந்து நிலையம் அருகே சென்றபோது, தண்ணீா் லாரி மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ஹேமவா்த்தினி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சடலத்தை மீட்டு, மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுத் துறையினா் தலைமறைவான தண்ணீா் லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.