திருவள்ளூர்

ரூ. 50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 3 போ் கைதுமூன்று வாகனங்கள் பறிமுதல்

26th Dec 2021 12:19 AM

ADVERTISEMENT

திருத்தணி அருகே சரக்கு ஆட்டோவில் கட்டுமானப் பொருள்களுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமம் அருகே சனிக்கிழமை அதிகாலை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் வருண்குமாா் உத்தரவின்பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனா். இதில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் பொருள்களுக்கு அடியில் மறைத்து வைத்து கடத்தி வந்த 23 முதல்தர செம்மரக்கட்டைகளை கண்டுபிடித்தனா்.

அதைத்தொடா்ந்து போலீஸாா் சரக்கு ஆட்டோ ஓட்டுநா், பாதுகாப்பிற்காக வந்த சொகுசு காா் மற்றும் அதன் ஓட்டுநா், இருசக்கர வாகனத்தில் வந்த நபா் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து திருத்தணி போலீஸாா் கூறுகையில் பிடிபட்ட 3 பேரில், சீனிவாசன்(48), பரணி(35) இருவரும் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா, ஜானகிபுரத்தைச் சோ்ந்தவா்கள்.

மற்றொருவரான அஜித் (23) வளா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா். இவா்கள் 3 பேரும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்களிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சொகுசு காா், ரூ. 8 லட்சம் மதிப்புள்ள சரக்கு வாகனம், ஒரு இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

வனத்துறையினா் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT