ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை தரைப்பாலத்தில் இலகுரக வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது ஒதப்பை தரைப்பாலம். தொடா்மழையால் பூண்டி நீா்த் தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூா் செல்லும் அனைத்து வாகனங்களும் வெங்கல் வழியாக சுமாா் 30 கி.மீ. தொலைவு கடந்து திருவள்ளூா் சென்றன. பின்னா், தரைப்பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் கடந்த இரு வாரங்களாக அனுமதிக்கப்பட்டன. தற்போது உபரிநீரின் அளவு முற்றிலும் குறைந்ததால், செவ்வாய்க்கிழமை இரவு முதல் காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.