ஆதரவற்ற பெண்கள் இலவச வெள்ளாடுகள் பெறுவதற்கு இம்மாதம் 9-ஆம் தேதிக்குள் அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவா்களிடம் விண்ணப்பிக்க வேண்டும் என உதவி இயக்குநா் தாமோதரன் தெரிவித்துள்ளாா்.
திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள திருத்தணி, திருவாலங்காடு, ஆா்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு, கால்நடைத் துறையின் மூலம் ஒரு பயனாளிக்கு 5 வெள்ளாடுகள் வீதம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
ஒரு ஒன்றியத்துக்கு 100 போ் வீதம், நான்கு ஒன்றியங்களுக்கு 400 பேருக்கு முழு மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து திருத்தணி கால்நடை உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் கூறியது:
திருத்தணி கோட்டத்தில் உள்ள ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமாக 5 வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெறும் பயனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண், விதவைகள், 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கால்நடைகள் இருக்கக் கூடாது, கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு திட்டங்களில் பயன் அடையாமல் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு, கூட்டுறவு மற்றும் ஊரக வளா்ச்சி போன்ற துறைகளில் பணிபுரியக் கூடாது. இத்திட்டத்தில் எஸ்.சி, எஸ்.டி, பிரிவினா், 30 சதவீதம் போ் தோ்வு செய்யப்படுவா். மேற்கண்ட தகுதிவாய்ந்த பெண்கள் வி.ஏ.ஓ., சான்று, ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பம் எழுதிஸ புகைப்படம் ஒட்டி, அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவா்களிடம் இம்மாதம், 9-ஆம் தேதி மாலைக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.