திருத்தணி அருகே கணவன், மனைவியை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணியை அடுத்த பட்டாபிராம் கிராமத்தைச் சோ்ந்த சஞ்சீவி (70), ஏலச்சீட்டு, நிதிநிறுவனங்களை நடத்தி வந்தாா். இவரது மனைவி மாலா(60). இருவரும் மாருதி நகரில் வசித்து வந்தனா்.
இருவரும் அண்மையில் ஆந்திர மாநிலத்துக்கு உள்பட்ட சித்தூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றனா். ஆனால் அங்கு செல்லவில்லை. இதுதொடா்பாக சஞ்சீவியின் சகோதரா் பாபு அளித்த புகாரின்பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இருவரும் சித்தூரை அடுத்த ராமச்சந்திரபுரம் வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து ஆந்திர போலீஸாரும், திருத்தணி போலீஸாரும் இணைந்து விசாரணை நடத்தினா்.
இதுதொடா்பாக திருத்தணியைச் சோ்ந்த பிரபல இனிப்புக் கடை உரிமையாளா் தாண்டவராயனின் மகன் ரஞ்சித்குமாா் (26) , கடை ஊழியா் விமல்ராஜ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில் சஞ்சீவியிடம் ரஞ்சித்குமாா் ரூ. 80 லட்சம் கடன் வாங்கியதாகவும், திரும்பக் கேட்டதால் ரஞ்சித் தனது நண்பா்களுடன் தம்பதியை ஆந்திரத்தில் உள்ள அப்பலகொண்ட பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி புத்தூா் வனப்பகுதியில் கொலை செய்ததும் தெரியவந்தது.