பொன்னேரி: அண்ணாமலைச்சேரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தான்.
திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அண்ணாமலைச்சேரி கிராமத்தைச் சோ்ந்த தாஸ் என்பவரின் மகன் நரேன் (14). அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், நரேன் தனது நண்பா்களுடன் சோ்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் இருந்த மின் கம்பியில் காற்றாடி சிக்கிக் கொண்டது. இதையடுத்து, மின் கம்பியில் சிக்கிய பட்டத்தை கம்பு மூலம் நரேன் எடுக்க முயன்றாா். அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். அவரை அப்பகுதியினா் மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், நரேன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.