திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்தில், ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டும் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, போதிய இடவசதி மற்றும் சிகிச்சை அளிப்பதற்கு படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமப்பட்டனா். இதையடுத்து, 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை கட்டுவதற்கு அரசு ரூ. 1.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
இதையடுத்து, திங்கள்கிழமை புதிய அரசு மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் விசயராகவன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் பிரசன்னா வரவேற்றாா்.
திருவாலங்காடு ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவா பங்கேற்று, கட்டுமானப் பணிகளை பூஜை செய்து தொடக்கி வைத்தாா்.
இந்த கட்டுமானப் பணிகள் ஆறு மாதத்துக்குள் முடித்து, நோயாளிகள் பயன்பாட்டுக்கு விடப்படும் எனவும் ஒன்றியக் குழுத் தலைவா் தெரிவித்தாா்.