திருவள்ளூர் அருகே தாமரைபாக்கத்தில் மறைந்த எஸ்.பி.பி.யின் இறுதி ஊர்வலத்தில் ரசிகர்களிடம் செல்லிடப்பேசிகள், பணப்பை திருடு போனது.
இதையொட்டி அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த 11 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அருகே தாமரைபாக்கத்தில் மறைந்த எஸ்.பி.பி.யின் பண்ணை வீட்டில் அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்துவதற்காக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.
இதை சாக்காக வைத்து சிலர் கூட்ட நெருக்கடியை பயன்படுத்தி செய்தியாளர்கள், ரசிகர்களிடம் பர்ஸ் மற்றும் செல்லிடப்பேசிகளைத் திருடியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டோர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. அரவிந்தனிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் பண்ணை இல்லத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரியும் நபர்களை பிடிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் அங்கு நடமாடிய 11 பேரை காவல் துறையினர் பிடித்துச் சென்றனர். தற்போது, வெங்கல் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.