கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமாருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார். கும்மிடிப்பூண்டி தொகுதியில் 3 வது முறையாக இவர் எம்எல்ஏ பதவி வகித்து வருகிறார். இவரது வீடு கும்மிடிப்பூண்டி அருகே மஞ்சங்கரணையில் உள்ளது. கரோனா தொற்று காலத்திலும் இவர் தொகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவது, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, பொதுநிகழ்ச்சிளில் பங்கேற்பது என தீவிரமாக இருந்தாலும் முகக்கவசம் அணிவது, சமுக இடைவெளியை பின்பற்றுவது என அரசின் விதிமுறைகளை பின்பற்றி வந்தார்.
இதற்கு முன் இவர் 5 முறை கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டார். கடந்த வாரம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்திற்கு முன்பும் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். 5 முறையும் இவருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதியானது. இந்நிலையில் 4 நாள்களுக்கு முன் அதிமுக தொண்டரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். இந்நிலையில் புதன்கிழமை இவர் உடல்நிலையில் லேசான மாற்றத்தை உணர்ந்து கரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் இவருக்கு கரோனா தொற்று உறுதியானது.
தற்போது லேசான பாதிப்புகளுடன் இவர் சென்னை மியாட் மருத்துவமறையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தனது குடும்பத்தார் அண்மையில் தன்னோடு தொடர்பில் இருந்த கட்சியினர் உறவினர்களை தனிமைப்படுத்தி கொள்ள சொல்லியும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள சொல்லியும் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் கேட்டுக் கொண்டதன் பேரில் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.