திருவள்ளூர் அருகே புகைப்படக்காரர் கொலை தொடர்பாக 4 பேரை கிராமிய காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த காக்களூரைச் சேர்ந்த பிரேம்குமாரின் மகன் தினேஷ் (35). அப்பகுதியில் புகைப்பட நிலையம் மற்றும் நகலகம் நடத்தி வந்தார். இவரது மனைவி அனிதா. குடும்பத் தகராறு காரணமாக இருவரும் கடந்த 3 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த கடைக்கு அப்பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி கோட்டீஸ்வரி(30) வந்து சென்றததால் தகாத உறவு ஏற்பட்டது.
இதுதொடர்பாக அவரது கணவர் பலமுறை தினேஷை எச்சரித்துள்ளார். அதைத் தொடர்ந்து பழக்கத்தை தொடர்ந்ததால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் மற்றும் 3 பேருடன், கடந்த புதன்கிழமை பிற்பகல் புகைப்பட நிலையத்திற்குள் புகுந்து அரிவாளால் சராமரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்து தினேஷ் பலியானார். இது தொடர்பாக தினேஷ் மனைவி அனிதா திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் கோட்டீஸ்வரியுடன் தகாத உறவு வைத்திருந்த காரணத்தால் வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது. அதனால் இந்த வழக்கில் தொடர்புடைய அப்பகுதியில் சாலையோரம் ஏரியில் மறைந்துள்ளதாக வியாழக்கிழமை அதிகாலையில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.