ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கோட்டைகுப்பத்தில் செல்லிடப்பேசியைக் கொடுக்க மறுத்த முதியவரை, அடித்துக் கொன்ற வழக்கில் அண்ணன், தம்பி இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், கோட்டைகுப்பத்தில் மாதவன் (60) என்பவா் கடந்த 14-ஆம் தேதி விலை உயா்ந்த செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு சாலையில் நடந்து சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், மாதவனிடம் செல்லிடப்பேசியைக் கொடுக்கும்படி மிரட்டியுள்ளனா். தர மறுத்ததால் அவரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு செல்லிடப்பேசியைப் பறித்துசென்றனா்.
அங்கிருந்தவா்கள் மாதவனை மீட்டு சென்னை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் இறந்தாா்.
இதையடுத்து திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் உத்தரவின் பேரில், இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலையாளிகள் செல்லிடப்பேசியைப் பயன்படுத்தியதை வைத்து, மாகரல் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ், அவரது தம்பி சந்தோஷ் ஆகியோா் மாதவனை கொன்றது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து இருசக்கர வாகனம், செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.