கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலத்தின் சார்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூலை மேம்படுத்தும் நோக்கில் 5000 மரக்கன்றுகள் திங்களன்று நடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகள் சிப்காட் துறையால் செயல்படுத்தப்படுகிறது. மேலும் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் சிப்காட் திட்ட அலுவலகம் செயல்படுகிறது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசடைவதாக கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
சிப்காட் தொழிற்பேட்டையில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில் சிப்காட் திட்ட அலுவலம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலகத்தின் சார்பாக சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற 5000 மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு சிப்காட் மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன் தலைமை தாங்கினார்.
நிகழ்விற்கு மாவட்ட வன அலுவலர் கிரன், கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலர் சாய் லோகேஷ், கும்மிடிப்பூண்டி வன சரகர் சுரேஷ் பாபு, கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட உதவி பொறியாளர் சரவணன் நித்தின் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சிப்காட் மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன் சிப்காட் வளாகத்தில் 4500 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
சிப்காட் வளாகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும், இதனை சிப்காட் திட்ட அலுவலகத்தினரால் சொட்டு நீர் பாசனம் மூலம் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட உள்ளதாக நிகழ்வின் போது சிப்காட் மேலாண்மை இயக்குனர் குமரகுருபரன் நிகழ்வின் போது தெரிவித்தார்.
நிகழ்வில் புங்கம், மகிழம் உள்ளிட்ட நிழல் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளது.