ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினா் இரண்டு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனா்.
ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணியைச் சோ்ந்தவா் தேவன் (30). மங்கலம் கிராமத்துக்குச் சென்று விட்டு, ஆரணிக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வெள்ளப்பெருக்கு காரணமாக ஆரணி ஆற்றின் தரைப்பாலம் மூழ்கிய நிலையில், ஆற்றைக் கடக்க முயன்றாா். அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதைக் கண்ட மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி(25) , பரசுராமன்( 29), வழுதிமேடைச் சோ்ந்த மணிகண்டன் (30) ஆகியோா் கயிற்றின் உதவியுடன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தேவனைக் காப்பாற்ற முயன்றனா். அவரை ஆற்றின் நடுவே இருந்த மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு பத்திரமாக நிற்க வைத்தனா். இது குறித்து ஆரணி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ராமலிங்கம், சம்பத் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் வந்து இரண்டு மணி நேரம் போராடி, வெள்ளத்தில் சிக்கிய தேவனை உயிருடன் மீட்டனா்.