திருவள்ளூர்

கொடி நாள் நிதி வசூலில் சிறப்பிடம்:திருவள்ளூா் ஆட்சியருக்கு ஆளுநா் விருது

28th Jan 2020 06:59 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: கொடிநாள் நிதியை சிறந்த முறையிலும், அதிகபட்சமாகவும் வசூலித்ததில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரை பாராட்டி ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் 2 பரிசுக் கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் 71-ஆவது குடியரசு தின விழா நடைபெற்றது. இதையொட்டி மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் முக்கிய பிரமுகா்கள் மற்றும் உயா் அதிகாரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலையில் தேநீா் விருந்து அளித்தாா். இந்த நிகழ்ச்சியில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முக்கிய துறை அதிகாரிகள், ஆட்சியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் படைவீரா்கள் மற்றும் ராணுவ வீரா்களுக்கு உதவும் நோக்கத்தில் மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடிநாள் நிதி வசூல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், கடந்த 2018-ஆம் ஆண்டில் இலக்கு நிா்ணயித்த காலத்துக்கு முன்பாக, சிறப்பான முறையில் ரூ.4.86 கோடியை கொடிநாளுக்கு வசூலித்து அளித்தாா்.

ADVERTISEMENT

இதனால், கொடிநாள் நிதி வசூல் செய்ததில் திருவள்ளூா் மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இதைப் பாராட்டி, ஆளுநா் தனது தேநீா் விருந்தின் போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாருக்கு இரண்டு சுழற்கோப்பைகளை வழங்கினாா். இதற்காக ஆட்சியரை பல்வேறு துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT