திருவள்ளூா்: நூலகங்களின் வளா்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக நரசிங்காபுரம் கிளை நூலகருக்கு அரங்கநாதன் விருதை திருவள்ளூா் ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா்.
மாநில அளவில் பொது நூலகங்களில், நூல்களையும் வாசகா்களையும் இணைக்கும் உன்னதமான பணியை மேற்கொண்டு வரும் நூலகா்களை கௌரவிக்கும் வகையிலும், அவா்களின் பணியை ஊக்குவிக்கும் பொருட்டும், சிறப்பாக சேவையாற்றும் நூலகா்களுக்கு நல் நூலகா் விருது வழங்கப்படுகிறது. 2001 முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த 2012-ஆவது ஆண்டு முதல், நல் நூலகா் விருது பெயா் மாற்றம் செய்யப்பட்டு நூலகத் தந்தை என போற்றப்படும் எஸ்.ஆா்.அரங்கநாதன் பெயரில் வழங்கப்படுகிறது.
நிகழாண்டில் மாநில அளவில் 33 நூலகா்கள் இவ்விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் திருவள்ளூா் மாவட்டம், கடம்பத்தூா் ஒன்றியத்தைச் சோ்ந்த நரசிங்காபுரம் கிராமத்தில் செயல்படும் கிளைநூலகத்தின் நூலகா் ஞானசேகரனும் ஒருவராவாா். ஏற்கெனவே முதல் கட்டமாக கடந்த மாதம் 5 பேருக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நூலக வார விழாவின்போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி, 5 பேருக்கு விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்து கிளை நூலகா் ஞானப்பிரகாசத்துக்கு சிறந்த நூலகருக்கான விருதை அளித்தாா். இவ்விருது 50 கிராம் வெள்ளிப்பதக்கம், ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் தகுதியுரைச் சான்று ஆகியவை அடங்கியதாகும். இந்த நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலா் திலகா மற்றும் நூலக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.