பொன்னேரி அருகே உள்ள பஞ்செட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் போக்குவரத்து, காவல்துறை, கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது வாகனங்களின் பதிவு எண், எஃப்சி, காப்பீடு, சீட் பெல்ட், அவசரக்கால வழிகள், படிக்கட்டுகளின் தரம் ஆகியவற்றை அவர்கள் சோதித்தனர். 36 பள்ளிகளைச் சேர்ந்த 300 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சசி, கும்மிடிப்பூண்டி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கல்பனா தத், பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் சாம்பசிவம், சாலைப் போக்குவரத்து ஆய்வாளர்கள் முருகேசன், செளந்தரராஜன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.