ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
திருத்தணியை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா வெகு விமரிசையுடன் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை தேசம்மா கோயிலில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கிராம மக்கள் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கிராம இளைஞர்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களைப் பூசி மகிழ்ந்தனர். இரவு பூங்கரகத்துடன், களிமண்ணால் செய்யப்பட்ட கங்கை அம்மன் விக்ரகம் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.