ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள சூளைமேனி கிராமத்தில் மழை வேண்டி சிவபெருமானுக்கு சனிக்கிழமை 1,008 குடம் தண்ணீர் அபிஷேகம் நடைபெற்றது.
சூளைமேனி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், இங்கு அமைந்துள்ள ராமலிங்க ஈஸ்வர சமேத பர்வதவர்த்தினி கோயிலில் சிவபெருமானுக்கு 1,008 தண்ணீர் குட அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தமிழகத்துக்கு குடிநீர்ப் பற்றாக்குறை நீங்க வேண்டி, வருண ஜபமும், சகஸ்ர கடாபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர், தண்ணீர் பற்றாக்குறை நீங்கி விவசாயம் செழிக்க வேண்டி, பிரார்த்தனை செய்தனர். இதில் ஊர் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.