பொன்னேரி நகரில் ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்ட 10 மணி நேர மின் தடை காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
பொன்னேரி நகரில் 40ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள வேண்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து, பொன்னேரி நகருக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே கோடை வெயிலால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் பொன்னேரி நகரில் கடந்த 20 நாள்களாக முன் அறிவிப்பு ஏதும் இன்றி, மின் தடை செய்யப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 17-ஆம் தேதி இரவு முழுவதும் விட்டு, விட்டு மின் தடை செய்யப்பட்டதாகக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொன்னேரி நகரில் காலை 9.30 மணியளவில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மதியம் 2.30 மணிக்கு மின் விநியோகம் தொடங்கியது. பின்னர் மதியம் 3.30 மணிக்கு மின்தடை செய்யப்பட்டு, இரவு 8.30 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது.
இதனால் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். பொதுமக்களின் நலன் கருதி பொன்னேரி பகுதியில் சீரான மின் விநியோகம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.