கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலில், 64-ஆம் ஆண்டு மகோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, கடந்த 14-ஆம் தேதி பந்தக்கால் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை மகா அர்ச்சனை, சிறப்பு அன்னதானம், மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, சீதா ராமர் திருக்கல்யாணம், சந்தனக் காப்பு சாற்றுதல், மகா அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மேள வாத்தியம், பேண்டு வாத்தியம், வாண வேடிக்கை, நித்ய பஜனை, பண்டரி பஜனை நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி, பிரசன்ன ஆஞ்சநேயர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. புதுகும்மிடிப்பூண்டி வீதிகளில் நடைபெற்ற மகோற்சவ விழாவில், புதுகும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி, எஸ்.ஆர்.கண்டிகை, பாத்தபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பிரசன்ன ஆஞ்சநேயர் சுவாமிகள் ஆலய விழா குழுவினர், புதுகும்மிடிப்பூண்டி பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.