மாதவரம் அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, மூலக்கடை, அஞ்சுகம் நகர், பொன்னார் தெருவைச் சேர்ந்தவர் சாம்சன் (26). அதே பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த பங்க்கில் பெட்ரோல் நிரப்ப வரும் இளம்பெண் ஒருவரிடம், அவரது செல்லிடப்பேசி எண்ணை வாங்கிய சாம்சன், தன்னை காதலிக்குமாறு கூறி, அப்பெண்ணை தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் தனது நண்பரான சர்மா நகரைச் சேர்ந்த கார்த்திக்கிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக், தனது நண்பர்கள் விக்னேஷ், பிரபாகரன், தேவா, குண்டு கார்த்திக், சுரேஷ் ஆகிய 5 பேரை அழைத்துக் கொண்டு, இரு சக்கர வாகனங்களில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சாம்சனை தேடியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சாம்சன் அருகிலிருந்த மாதவரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். மாதவரம் போலீஸார் உடனடியாகச் சென்று 6 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 இரு சக்கர வாகனங்கள், 3 கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.