திருவள்ளூர் அருகே உளுந்தையில் செயல்பட்டு வரும் ஓராசிரியர் பள்ளி மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ. 8 லட்சத்தில் 20 குளியலறைகளுடன்யுடன் கூடிய கழிப்பறைகளை அமைத்து பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், உழுந்தை கிராமத்தில் அமைந்துள்ள ஓராசிரியர் பள்ளி சார்பில், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊராட்சிப் பகுதிகளில் தூய்மை பாரத இயக்கத் திட்டம் மூலம் 500-க்கும் மேற்பட்ட குளியலறைகளுடன் கூடிய கழிப்பறைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், திருவள்ளூர் அருகே பண்ணூர், மதுரமங்கலம் ஆகிய கிராமங்களில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், நவீன கழிப்பறைகள் அமைத்துக் கொடுக்க தனியார் நிறுவனம் பங்களிப்பாக ரூ. 8 லட்சம் வழங்கியது. இந்த நிதியின் மூலம் 20 குளியலறைகளுடன் கூடிய கழிப்பறைகள் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், பண்ணூர் கிராமத்தில் குளியலறைகளுடன் கூடிய கழிப்பறைகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஓராசிரியர் பள்ளியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், செயலர் கிருஷ்ணமாச்சாரி முன்னிலையிலும் பயன்பாட்டுக்காக பயனாளிகளிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் பங்களிப்பு செய்த தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.