அனுமன் ஐயந்தியையொட்டி, திருப்பந்திபுரம் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக்கப்பட்டது.
திருவள்ளூா் பகுதிகளில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று அனுமன் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூா் அருகே திருப்பந்தியூா் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற அனுமன் ஜயந்தி விழாவையொட்டி, மூலவா் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 எட்டு வடை மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் மற்றும் லட்சுமி குபேரா் திருமஞ்சனம் ஆகியவற்றுடன் சிறப்புப் பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் பிற்பகலில் வடை பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
இதேபோல் திருவள்ளூா் அருகே பெரியகுப்பம் தேவி மீனாட்சி நகரில் 32 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில் திருமஞ்சனம் நடைபெற்றது. அதையடுத்து, பால், மஞ்சள் அபிஷேகம் மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதேபோல், காக்களூா் வீர ஆஞ்சநேயா் கோயிலில் வண்ண மலா்கள் மற்றும் வெற்றிலை மாலை அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா். நிகழ்ச்சியில் திருவள்ளூா் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.