மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 389 பேர் ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யவும், உதவிகள் வழங்கவும் கோரி மனுக்களை அளித்தனர். இதில், நிலம் சம்பந்தமாக-145, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 69 மனுக்கள், கடனுதவி கோரி 2, குடும்ப அட்டை கோரி 5, வேலைவாய்ப்பு கோரி 28, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம்-20, சட்டம் மற்றும் ஒழுங்கு-24, ஊரக நகர்ப்புற வளர்ச்சி-42, இதர துறைகள் சம்பந்தமாக -54 என மொத்தம் 389 மனுக்கள் வரை ஆட்சியர் பெற்றுக் கொண்டார்.
பின்னர், இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களை அவர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மக்களவைத் தேர்தல் பணியின் போது, பள்ளிப்பட்டு வட்டம், சொரக்காய் பேட்டையைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதற்காக அவரது பெற்றோருக்கு இறப்பு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 15 லட்சத்துக்கான காசோலையையும், வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டம் மூலம் கணவரால் கைவிடப்பட்டோருக்கான ஓய்வூதியத்துக்கான ஆணையையும் அவர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமார், நேர்முக உதவியாளர் (தேர்தல்) புனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) பெ.பார்வதி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.